தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Wednesday, December 22, 2010

நல்ல தமிழ் பேசுவது ஈழச் சகோதரர்களா?

அண்மையில் ஒரு மலேசிய வானொலியில் பேட்டி ஒன்றை கேட்க நேர்ந்தது.. அயல் நாட்டில், ஆங்கிலேய நாட்டில், தமிழ்த் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண் குயிலின் பேட்டி அது. மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் தமிழ் பேசியது அந்த குயில். அந்த குயில் பெற்றோரின் உதவியால் சொந்தமாக தமிழ் படித்து அயல் நாட்டில் அரங்கேற்றம் கண்டு, தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே, குரலில் நல்ல தெளிவு, தன்னம்பிக்கை, தன்னடக்கம்... என்னை வெகுவாக கவர்ந்தது அந்த பேட்டி - ஒரு சில நெருடல்களுக்கு இடையே!

அவர் சொன்ன சில விஷயங்கள் என்னை குழப்பி விட்டன! அயல் நாட்டில் குடிபெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தான் உண்மையில் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் கூறியது என்னை நெருடியது!

ஈழச் சோதரர்கள் மீது எனக்கு பாசமும் நேசமும் பற்றும் பொறுப்பும் இருக்கிறது.. அது நானே மறுத்தாலும் மறைக்க முடியாத உண்மை! இருந்தாலும் அவர் கூறிய கூற்று.. என்னை நெருடியது!

ஈழச் சகோதரர்கள் பேசும் தமிழில் பல வார்த்தைகள் தமிழ் அகராதியில் காணக் கிடைக்காத பொழுது, அவர்கள்தான் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்று அவர் சொன்ன கருத்து... என்னை வெகுவாகப் பாதித்தது! உதாரணத்திற்கு, ஆம் என்பதற்கு 'ஓமோம்' (நண்பரின் பின்னூட்டுக்குப் பிறகு திருத்தப் பட்டது) என்கிறார்கள். இது தமிழா? ஈழச் சகோதரர்கள் என்னை மன்னிக்க வேண்டும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றம் தானே!

அடுத்து ஒரு வாக்கியம் சொன்னார், பேட்டியின் இருதியில். "முடிந்த அளவுக்கு எல்லோரும் நல்ல தமிழில் பேசுவோம்" என்று. இந்த 'முடிந்த அளவுக்கு' என்னும் வார்த்தை சரியானதா? அந்த குயிலின் மேல் எனக்கு வருத்தமில்லை. நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும், இந்த வார்த்தை சரியான வார்த்தையா? அதென்ன.. முடிந்த அளவுக்கு?! இயன்ற அளவுக்கு என்றுதானே சொல்லி இருக்க வேண்டும்! 'முடிந்த 'அளவுக்கு என்றால் பொருட் குற்றம் ஏற்படாதா?

இது யாரையும் குறை சொல்ல எழுதும் பதிவல்ல.. ஒரு தெளிவு வேண்டி எழுதும் பதிவு. என்னைப் பொருத்த வரை, மலேசியத் தமிழர்களும், சிங்கப்பூர் தமிழர்களும் மற்ற இடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களை விட சற்று அதிகமாக நல்ல தமிழை பேசுகின்றனர். அறிஞர் அண்ணா மலேயாவுக்கு வந்த போது, காலைப் பசியாற வாருங்கள் என்று அழைத்தவர்களை அவர் எப்படி மெய்மறந்து புகழ்ந்தார் என்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.

ஆக, தமிழ் வல்லுனர்கள்.. இயன்றால் தெளிவு சொல்லுங்கள்.. நன்றி!

-கிருஷ்ணமூர்த்தி

Tuesday, May 11, 2010

ஏட்டுக் கல்வியா? தொழிற் கல்வியா? சிறு தொழிலா??

நண்பர்களே.. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? நாட்டு நடப்பு என்ன தெரியுமா?

பதினாறு வயது மாணவன் ஒருவனுக்கு எப்படி அறிவுரை சொல்வது? முடியுமா நம்மால்?? இடைநிலைக் கல்வி முடித்த மாணவன் ஒருவன், பல்கலைக் கழகத்தில் சென்று படித்துக் கிழித்து பட்டமெல்லாம் வாங்கிவிட்ட நம்மைப் போன்றவர்களைப் பார்த்து கேட்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.. "என்ன அங்கிள் படிக்கிறது?"

பெரியவர்கள், பெற்றோர்கள் நம்மைப் பார்த்து குழப்பத்தோடு கேட்பது.. "எங்க அனுப்பலாம் பையனை..?"

இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் உண்டா நம்மிடம்? சிலனேரம் மனதுக்குள்ளும்.. சிலநேரம் வெளிப்படையாகவும் நான் சொல்லும் பதில் இதுதான்..

"நல்லா படிச்சா.. நல்ல வேளைக்குப் போகலாம்..
படிக்காம இப்பவே எதாவது தொழிலை கத்துக்கிட்டா.. பின்னாளில் நல்ல லாபம் பார்க்கலாம்.. இப்பவே சின்னதா ஏதாவது தொழில் பண்ணா.. பின்னாடி பெரிய தொழிலதிபர் ஆகலாம்.. நல்லா படிச்ச நூறு பேருக்கு வேலை போட்டுக் கொடுக்கலாம்.."

நான் சொல்றது தப்புன்னா.. என்னை மண்ணிச்சிடுங்க..! ஆனா.. அதுதான் நிஜம்..

Monday, January 4, 2010

தாலி வந்த கதை

நண்பர் வேடிக்கை மனிதனின் 'தாலி புனிதமா?' http://sharavanaanu.blogspot.com/2009/12/blog-post.html என்ற கட்டுரையை படித்த பின்பு எனக்கு ஏதோ ஒரு விதத்தில் தெரிந்த.. தெரிய வந்த தாலியைப் பற்றிய தகவலை இங்கே பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. இதை நண்பரின் கட்டுரைக்கு பின்னூட்டாக போட்டிருக்கலாம்.. சிறு கருத்தாக இருந்திருந்தால்..!

சரி.. இந்த தாலி வந்த வந்த கதைதான் என்ன..?

ஆரம்பத்தில், நாகரிகம் குறைந்திருந்த மனிதனிடம்.. பெண் மோகம் குறைவாகவே இருந்தது.. ஆனால் பின்னாளில் நாகரிகம் வளர வளர மனிதனின் பெண்ணாசை பெருத்துவிட்டது. (அதனால்தானே நான் மிருகத்திடமிருந்து மாறுபடுகிறோம்..! )

ஆரம்பத்தில், மிருகங்களைப் போலவே மனிதனும் தனக்கு தேவைப்பட்ட துணையை தானாக அடைந்தான்.. வலிமையுள்ள, பலசாலியான மனிதன் தன் கூட்டத்திற்கு அரசனானான் அல்லது தலைவனானான். தலைவனானால்.. தான் நினைத்த பெண்களுடன் சல்லாபிக்க ஏது தடை..? தனது ஆக்கிரமிப்பை மற்ற ஆண்களுக்கு உணர்த்த தான் மோகிக்கும் பெண்களின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி.. தனது அடையாளமாக ஏதாவது ஒரு சிறு பொருளை கட்டி விடுவான் அந்த தலைவன். உதாரணத்திற்கு, அவன் வேட்டையாடி கொண்டு வந்த புலி பற்கள்.. நகங்கள் போன்ற சின்னங்களை கட்டி விட்டான். இதைப் பார்க்கும் மற்ற ஆண்கள்.. அந்த கயிற்றை அனிந்திருக்கும் பெண் அந்த பலசாலித் தலைவனுக்கு சொந்தமானவள் என்று அறிந்து அந்தப் பக்கமே தலை சாய்க்க மாட்டார்கள்.

பின்னாளில், நாகரிகம் வளர வளர இந்த கயிற்றினால் தலைவனுக்கு சில பிரச்சனைகள் தோன்ற ஆரம்பித்தன. அவனுக்கு சொந்தமான பெண்களுக்குள் பொறாமை, போட்டி மற்றும் பல அடிப்படைப் பிரச்சனைகள் ஆரம்பமாயின.. அதனால், தனது அடையாளத்தை.. மாராப்பில் மறைத்து வைக்கச் சொன்னான். நாளடைவில் மற்ற ஆண்களுக்கும் கொஞ்சம் தைரியம் வர, தங்களுக்கு பிடித்த பெண்களை கைப்பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களும் தலைவனைப் பின்பற்றி ஏதாவது ஒரு சின்னத்தை பெண்களின் கழுத்தினில் கட்டிவிட ஆரம்பித்தனர்.

பின்னாளில் இது ஒரு கலாச்சாரமாக மாறிவிட, பொதுவான சின்னங்களை பயன்படுத்தினர். பெண்கள் திருமணம் ஆனதும், தாமதிக்காமல் குழந்தைப் பேறு கொள்ள வேண்டும் என்று நினைத்து, சில பெண் உறுப்புக்களை தாலியின் சின்னமாக அமைத்தனராம். அப்படி வந்ததுதான் பொட்டுத் தாலி (பெண்ணின் மார்பகம்), திருமாங்கல்யாம் (பிறப்புருப்பைச் சார்ந்திருக்கும் எலும்புகள்) போன்றவை.

இந்த பிறப்பு உறுப்புச் சின்னங்கள்தான் இன்னமும் நம் பெண்களின் கழுத்தில் தாலியாக அலங்கரித்து இருக்கிறது என்று பெரியவர் ஒருவர் சொன்ன கதையைத்தான் இங்கே எழுதியிருக்கிறேன். அவர் சொன்ன விசயங்களை நான் எனக்கு புரிந்த விதத்தில் எழுதியிருக்கிறேன். இந்த கதை என் சிற்றறிவால் ஏற்றுக் கொள்ளப் பட்ட கதை. மற்றவர்கள் கருத்துக் கூறினால் சிறப்பாக இருக்கும்..

நன்றி
K. கிருஷ்ணமூர்த்தி

பின்குறிப்பு : என் மனைவி தாலி அணிவதை நான் விரும்பாததால்.. இன்றுவரை அவளும் தாலி அணிவதில்லை..!