தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..
Showing posts with label கிரெடிட் கார்டு. Show all posts
Showing posts with label கிரெடிட் கார்டு. Show all posts

Tuesday, July 28, 2009

என் தாயாரும் கிரெடிட் கார்டும்!

கிரெடிட் கார்டு (Credit Card) என்பது நமக்கெல்லாம் பரீட்சயம் ஆகும் முன்பே, பாடசாலைப் பக்கமே ஒதுங்காத என் தாயார் மட்டுமல்ல.. இன்னும் எத்தனையோ பேர் இந்த கிரெடிட் கார்டுகளை பயன் படுத்தி இருந்தார்கள். அதிலும், நம்மை எல்லாம் விட நேர்த்தியாகவும், புத்திசாலித்தனமாகவும் வட்டியே இல்லாத கிரெடிட் கார்டுகளை காலங்காலமாக பயன் படுத்தி இருக்கிறார்கள் என்று ஒரு முறை வானொலியில் சொன்னேன்.. உடனே தொலைபேசி அலறத் தொடங்கி விட்டது ஆர்வத்தில்..!

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?!

மலேசியத் தோட்டப்புறத்தில் பிறந்தவன் நான். எங்கள் தோட்டங்களில் எல்லாம் ஒரு பழக்கம் இருக்கும். அதாவது, மீன் வியாபாரி, காய்கறி வியாபாரி, பலசரக்குக் கடை வியாபாரிகள் எல்லாம் '555' என்ற எண் பொறித்த (மலாய் மொழியில் Buku Tiga Lima என்று பிரபலம்) புத்தகத்தை வைத்திருப்பார்கள். அந்த புத்தகமோ, இன்றைய கிரெடிட் கார்டு அளவைப் போலத்தான் இருக்கும்.

இவர்களிடம் பொருள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டு, அவர்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பை அந்த புத்தகத்தில் எழுதிவிட்டு, தாங்களும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை இன்னமும் கூட சில தோட்டங்களில் நடைமுறையில் இருக்கிறது. மாதம் முடிந்ததும், சம்பளத் தேதி முடிந்ததும், வீடு வீடாய் சென்று கணக்கை சரிபார்த்து மொத்தத் தொகையை பெற்ற்றுக் கொள்வார்கள். அல்லது, வாடிக்கையாளர்கள் கடையில் சென்று பணத்தை செலுத்தி விடுவார்கள். பணம் செலுத்தாவிட்டால் அடுத்த மாதத்திற்கு உண்டான பொருட்களை வாங்க முடியாது.

இந்த '555' நோட்டுப் புத்தகத்தைத் தான் நான் கிரெடிட் கார்டு என்று சொன்னேன் அன்று. இதில் வசதி என்னவென்றால், மாத பாக்கியை தாமதமாக தந்தாலும் கிரெடிட் கார்டு போல் வட்டி இல்லை! பல வியாபாரிகள் பொருட்களை நமது வசிப்பிடத்திற்கே கொண்டு வந்து அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதும், பணத்தை நம்மைத் தேடி வந்து பெற்றுக் கொள்வதும்தான் இதன் தனிப் பெரும் சிறப்பு. இது இப்போதுள்ள கிரெடிட் கார்டில் சாத்தியமா?

அந்த காலத்தில், ஒருவரின் நன்னடத்தை, வாக்குச் சுத்தம் போன்றவற்றை கொண்டு அவர்களுக்கு எவ்வளவு கடன் தரலாம் என்று நிர்ணயித்தனர். அதனால், பிரச்சனைகள் குறைவாக இருந்தன. இன்று..?! கிரெடிட் கார்டினால் உலக அளவில் பிரச்சனைகள்!!!

மீண்டும் சொல்கிறேன், நாம் எவ்வளவு தான் நவீனமானாலும்.. நம் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள்..! என் தாயார் என்னைவிட புத்திசாலியான கிரெடிட் கார்டு பயனீட்டாளர்..!!!!

K. கிருஷ்ணமூர்த்தி