தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, February 28, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 10

பாகம் ஒன்று

• முடிவு

கவிதைக்கு உயிராய் இருப்பது பாடுபொருள். உடலாய், அலங்காரமாய் அழகு சேர்ப்பது சொற்கள். இது இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றால், கவிதை கருத்தில் நிற்கும். காட்சி ஒன்றானாலும், காணும் கண்கள் வேறுபடும்போது.. கருத்தும் வேறுபடுகிறது. நல்ல கவிதைகள் கூட, கற்போரின் தகுதிக்கேற்ப, அவரவர் நிலையில் வேறு வேறாய் அர்த்தப்படுகின்றன. எனது சக்திக்கும், இரசனைக்கும், கருத்துக்கும் உட்பட்ட மூன்று கவிதைகளை இங்கே நான் பரிசுக்குரிய கவிதைகளாகவும், சில கவிதைகளை கவனத்தை ஈர்த்த கவிதைகளாகவும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். இதில் மற்ரவர்களுக்கு முரண் இருந்தால், அதுவும் ஆரோக்கியமானதுதான், வரவேற்கப்படவேண்டியதுதான். சர்ச்சைக்குப் பின், தர்க்கத்துக்குப் பின் ஒரு புதிய தெளிவு பிறக்கும். அதை அனைவரும் அகன்ற மனதோடு ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாட்டில், தமிழ் வாழ வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பல உருவாகி வாழ வேண்டும். வழி காட்ட வேண்டும். இன்னும் நிறைய இளம் கைகள் கவிதை எழுத தன் பென்சில்களை தீட்ட வேண்டும், பேனாக்களில் மையூற்ற வேண்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புதுக்கவிதை இம்மண்ணில்!!

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 9

• சிறப்புப் பரிசு.

பல்கலைக்கழகங்களில், கல்விப் புதையலை தோண்டச் செல்லும் நம் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் மிகச் சாதாரண விஷயங்களைச் சொல்லி, அவர்கள் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளில், செலவழிப்பது சில்லரைக் காசுகள் என்றாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பெற்றோரின் பெரிய பெரிய தியாகங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார், கவிஞர். தன்னை ஒரு ஆணாக உருவகப் படுத்தி எழுதியிருந்தாலும், “வானொலி வாங்க கூட்டுப்பணம் பிடித்தபோது”, “அலுக்காமல் அலங்கரித்துக்கொண்ட போது”.. என்ற வரிகளில்.. தன்னையும் அறியாமல், தான் ஒரு பெண் கவி என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறார். இருந்தாலும், கவிதையின் முடிவில், ஈன்றவளின் (பெற்றோரின்) தியாகத்தை எதார்த்தமாக சொல்லி, சட்டென்று நம்மை நெகிழ வைக்கிறார். கவிதையும் நெஞ்சில் நிற்கிறது.. கணக்கிறது!

முடியாது போடா...!

வெறுமை படரும்
ஹாஸ்டல் அறையில்
வைக்க
வானொலி வாங்க
கூட்டுப் பணம்
பிடித்த போது
தெரியவில்லை...!

பந்தாவுக்காக
நண்பர்கள்
மத்தியில்‘பிளாஞ்சா’
பண்ணும்போதும்
அறியவில்லை...!

காதலிக்காக
கஞ்சத்தனம்
இல்லாமல்
காசை
வாரி இறைத்தபோது
சத்தியமாய்
நினைவில்லை..!

தவறாமல்
சாப்பிட்டபோதும்..
அலுக்காமல்
அலங்கரித்துக்
கொண்ட போதும்...
எண்னவில்லை -
நான்என் வசமில்லை...!

ஒரு மாலைப் பொழுதில்
டாக்சி பயணம்...

‘முடியாது போடா,
நாலு வெள்ளித்தான் தருவேன்’
சீனனுடன்
சண்டை போட்ட
மூதாட்டியைப் பார்த்தவுடன்
பொட்டில் அடித்தது...

டாக்ஸி ஏறினால் பணம் செலவாகும்
என்று
நடந்தே
வீடு வந்து சேறும்
அம்மா!
-செ.ராஜேஸ்வரி
சுங்கைப்பட்டாணி
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 7

கவிதையில் வேற்று மொழிகள்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதைகளில், ஒரு சில நல்ல கவிஞர்கள் கூட, தமிழ்க் கவிதையில் அளவுக்கும் அதிகமாக அண்ணிய மொழியை சேர்த்து எழுதுவதைக் காண முடிகிறது! நல்ல கருத்து, சொல்லாட்சி, அழகியற்கூறுகள், எதார்த்தம்.. எல்லாம் இருந்தும்.. அண்ணிய மொழியின் ஆதிக்கம் ஒரு சில கவிதைகளின் தரத்தைக் குறைத்திருக்கிறது! சினிமா பாடல்களிலேயே அண்ணிய மொழி கலக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கும் நம்மவர்களுக்கு, இந்த கவிதைகளின் பால் ஈடுபாடு வருமா? உதாரணத்திற்கு, இந்த கவிதை:

நாங்க எல்லாம் மாறிட்டோம்
அதானால் பாதகமில்லை...

சமைக்கத் தெரியுமா?
எல்லார் துணிகளுக்கும்
‘வாஷிங் மிசினாய்’
இருக்கத் தெரியுமா?

‘இரவின் மடியில்’
நிலாப் பாடல்களை மறந்து
‘ஆராரோ ஆரிராரோ’
ஆலாபனை செய்து
‘டைமிங்’கோடு பாடத் தெரியுமா?

‘அண்ணாமலை’
‘மெட்டி ஒலி'களை மறந்து
குழந்தைக்கு
‘சூசூ’ கலக்கத் தெரியுமா?

தொட்டில் ஆட்டத்தெரியுமா?

மடிப்புக் கலையாமல்
‘ஐயன்’ போடத் தெரியுமா?

அனாமதேயக் ‘க்கால்’களை
‘க்கட்’ பண்ணத்தெரியுமா?

கஞ்சப் ‘பிஸ்னாரி’யாக
வாழும் முறைதெரியுமா?

அலுவலகத்தில்
'டப்புவே'யை
'யூஸ்' பண்னத் தெரியுமா?

வீடு வந்ததும்
கூட்டிப் பெருக்க தெரியுமா?

அந்தக் காலம் போல் இல்லை...
அதானால் பாதகமும் இல்லை...

எதற்கும்
தெரிந்து வைத்துக் கொள்
நண்பா..!
-ஏ.தேவராஜன் ஜாசின்.

கவிதை படிப்பதற்கு கலகலப்பாக இருந்தாலும்.. இது தமிழ்க் கவிதையா என்ற சந்தேகம் கூடவே எழுகிறது! இதையே மற்றவர்களும் பின் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டால் என்னவாகும்? இது இளைஞர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும்.. இன்னும் கொஞ்சம் தமிழ்ப் படுத்தி எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து.

இன்னும் இருக்கிறது..

Sunday, February 15, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 1 (நவம்பர் 2006)

என்னுரை.

என்னுள்..

‘ழ’கரமாய், இலயித்துக் கொண்டிருப்பவளே....

என்னைச் சிகரமாய் செதுக்கிக் கொண்டிருப்பவளே..

தமிழே..

உன்னை உரிமையோடு வணங்கி என் உரையை தொடங்குகின்றேன்..

என்னுள் நீயிருந்து.. காப்பாய் தேவி!!


புதுக்கவிதை.

கவிஞர்கள் பலருக்கு இது ஒரு கெட்ட வார்த்தை. இளைய தலைமுறை இலக்கியவாதிகளுக்கோ, இது ஒரு போதிமரம். அவர்களின் சிந்தனா சக்தியும், கற்பனை ஆற்றலும் கூடு கட்டி வாழும் ஆலமரம்.


எந்த மொழிக் கவிதை என்றாலும், சொல்ல வரும் கருத்துக்கள் அழகியற்கூறுகளோடு (Aesthetic elements) சொல்லப்படும்போதுதான், கவிதை.. கவிதையாகின்றது. காண்போரையும் கற்போரையும் கவர்ந்து ஈர்க்கிறது. அங்கதமானாலும், படிமமானாலும், குறியீடானாலும் தொண்மையானாலும்.. இந்த உத்திகள் எல்லாம் அழகியற்கூறுகளால் வடித்தெடுக்கப்படும்போதுதான், வார்த்தெடுக்கப்படும்போதுதான், அந்த கவிதை கணக்கிறது, சுவைக்கிறது, மனதில் பதிகிறது. வார்த்தைகள் வரையும் ஓவியம்தானே கவிதை! இந்த விஷயத்தில், புதுக்கவிதை ஓரளவுக்கு வெற்றி நடை போடுகிறது என்பதுதான் உண்மை.


புதுக்கவிதை, தமிழ் தாய் கண்ணயர, களைப்பாற கட்டப்பட்ட ‘புதிய’ தொட்டில் அல்ல. அவள் வெற்றி நடை போட்டு, தமிழ் வாழும் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வசந்தமாய் பவனி வர, அமைத்துக் கொடுக்கப்பட்ட ‘புதிய’ நெடுஞ்சாலை!


கைப்புண்ணுக்கு அறுவைச்சிகிச்சை தேவையில்லை.. ஐயோடின் போதும்! எங்கள் பாமரர்களின் சோகத்துக்கு, சுகத்துக்கு, போராட்டங்களுக்கு, புதுக்கவிதை போதும்! இன்னொரு புதுக்கவிதை இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது..


ஊமை

அன்னிய மொழியின் ஆதிக்கம்..

பேசத்தெரிந்தும்

ஊமையாய் கிராமவாசி !

-யாரோ


வேற்றுமொழி தெரியாததால், வாயிருந்தும்.. நன்றாய் பேசத்தெரிந்தும்.. பேசமுடியாத கிராமவாசிகளை, பாமரர்களை.. ஊமை என்கிறார் கவிஞர். நல்ல சொல்லாற்றல் இருந்தும், சிந்தனாசக்தி இருந்தும்.. யாப்பு தெரியாத எங்கள் இளைய சகோதரர்களும் ‘ஊமை’யாகிவிட்டனர் ‘மரபு’களின் மத்தியில்!
அப்படியென்றால் புதுக்கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா? அதெல்லாம் புதுக்கவிதை என்றாகிவிடுமா? அதுவும் இல்லை..


இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளை பார்க்கும் பொழுது, பல படைப்பாளிகள், உரை நடையை உடைத்துப் போட்டு கவிதையாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உதாரணத்திற்கு:

மாதச் சம்பளம்

மலை ஏறி

மரத்தைச் சீவுகிறார்கள்

மழை பாராமல்

வியர்வை சிந்துகிறார்கள்..
குறை அறியாமல்

இரவும் பகலும்

பாடுபடுகிறார்கள்..

ஆனால்

அவர்களின் குறை அறிந்தும்

ஊதியத்தை உயர்த்த மறுக்கிறார்கள்..
-(யுவனேஷ்வரன் வேலு, காராக் - நயனம் 3.3.2004)


இது கவிதையா? உரைநடையாகத் தானே தெரிகிறது. புதுக்கவிதையின் பலமே, புதிய சிந்தனைகள்தான், புதிய விஷயங்கள்தான், அழகியற்கூறுகள்தான். அவை இல்லாவிட்டால், புதுக்கவிதை என்ற வாள், இலக்கியப் போருக்கு உகந்ததாகாது! மாதச்சம்பளத்தை, அதன் முக்கியத்துவத்தை புதிய கோணத்தில் படப்பிடிக்க இவரது எழுதுகோல் தவறிவிட்டது!


உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி விரைவு இரயிலில் விரைந்து கொண்டிருக்க, இன்னமும் மாதச் சம்பளப் போராட்டம் நமக்கு தேவையா? அது ரப்பர் பாலாய் இழுத்துக்கொண்டேதான் இருக்கும். ரப்பர் தோட்டங்களில் கேள்விக்குறியாய் வளைந்து போனவனை தொழில்நுட்பத் தோட்டத்திற்கு புதுக்கவிதை பேனாக்கள் துரத்தவேண்டாமா? புதிய சிந்தனைதானே புதுக்கவிதை பேனாக்களின் மை!


வெறும் உரைநடையை உடைத்து போட்டு கருத்தே இல்லாத இன்னும் எத்தனையோ படைப்புக்கள், நம்மை முகஞ்சுளிக்க வைக்கின்றன. இப்பொழுதெல்லாம், புதினங்கள் சிலருக்கு தபால் நிலையங்களாக மாறிவிட்டன. டி.ராஜேந்தர் ஸ்டைலில், நிறைய வசன நடை ‘கவிதை’கள்.. இதோ இன்னொரு உதாரணம்:


முற்றுப்புள்ளி

அன்பே என் வள்ளி

தந்தேனே என் அன்பை அள்ளி

மறுத்தாயே காதலை காரணம் சொல்லி

இறுதியில் வைத்தாயே என் மனதில் கொள்ளி

ஆக மொத்தம்நம் காதலுக்கு முற்றுப்புள்ளி!

(நியூ சிட்டிசன், ஜாசின்)


இதுபோன்ற படைப்புக்களையும் இதழாசிரியர்கள் பிரசுரிக்கத்தான் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களை... கவிதை எழுத ஊக்குவிக்கிறார்களோ...?! இதுவே வாடிக்கையாகிவிடாமல் இருந்தால், கவிதை பிழைக்கும்.


இன்னும் ஒரு சிலர், பொன்மொழிகளை உடைத்துப்போட்டு, கவிதையாக்க முயன்றிருக்கிறார்கள்! ஒன்றன்கீழ் ஒன்றாக உரைநடைகளையும், பொன்மொழிகளையும் உடைத்துப்போடும் இது போன்ற ஒரு சிலரால்தான், புதுக்கவிதை எனும் வார்த்தையே ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை! உதாரணத்திற்கு:


பிரச்சனை!

பிரச்சனைகளைத் தீர்ப்பவன் தெம்படைகிறான்

சினம் கொள்பவன்அமைதி இழக்கிறான்..

சிந்தித்துச் செயல்பட்டால்
மன அமைதியும் நிம்மதியும்

நிரந்தரமாகி விடும்!

-வெற்றி இதழில் வந்த ‘கவிதை’.


ஏதோ, காலண்டரில் படித்த பொன்மொழிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறார். இதை எப்படி கவிதை என்பது?!


எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை யதார்த்தமாக ஒரு கவிஞன், வித்தியாசமாக படம் பிடித்துச் சொல்கிறானென்றால், என்னைப் பொருத்தவரை, அதுதான் கவிதை. இதைப்போல..


புத்தகம்

சொல்லிலும்

‘கம்’ இருப்பதால்தான்

அதனை

யாரும் திறப்பதில்லையோ?!

(பா.ராஜேஸ்வரி, குளுவாங்)


• ஆய்வு
இந்த ஆய்வுக்காக, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் (2004), நான்கு மாதங்களில் வெளிவந்த தென்றல், மன்னன், நயனம், வெற்றி, செம்பருத்தி, முத்தமிழ் போன்ற புதினங்களும், மக்கள் ஓசை, மலேசிய நண்பன், வானம்பாடி, உயர்வோம் போன்ற பத்திரிக்கைகளும் என் பார்வைக்காய் என்னிடம் தரப்பட்டன. இவற்றில் நான் கண்ட மொத்த படைப்புக்கள் 682. இவை அத்தனையையும் வாசித்தேன், ஆராய்ந்தேன். சிலவற்றின் தலைப்பே அவற்றுக்கான முகவரியாய், படிக்கும் ஆவலை தூண்டின. சிலவோ, முதல் வரியிலேயே... என் பொறுமையின் எல்லையை சோதித்தன! ஆய்வோடு நின்றுவிடாமல் அபிப்பிராயம் கூறுவதும் கடமை என்று உணர்கிறேன். ஆகவே, இது வெறும் ஆய்வு மட்டும் அல்ல, விமர்சனம்.


கிடைக்கப்பெற்ற 682 படைப்புக்களில், பாராட்டுக் கவிதை, இரங்கற்பா, நன்றி கூறும் கவிதை, கட்டுரைகளில் தலைகாட்டிய கவிதைகள், தொடர்கவிதைகள் போன்றவை ஆய்வுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால் அவற்றை தவிர்த்து விட்டேன்! மேலும் பல படைப்புக்களை கவிதைகளாக ஏற்றுக்கொள்ள ‘இலக்கியக் கண்’ மறுத்ததால், 340 கவிதைகளை மட்டும் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக்கொண்டேன்.


கவிதையின் ஆய்வை தொடங்குமுன், கவிதை எழுதுபவர்களின் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டுமல்லவா?


தோட்டத் தொழிலாளர்களாய் இங்கு நாம் குடியேறுவதற்கு முன்பாகவே, கடாரத்தை வென்று ஆட்சி புரிந்தவர்கள் நாம். இந்த சரித்திரம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏடுகளிலிருந்து ‘சரிக்க’ப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது வேதனை. இது இப்போதுள்ள சரித்திர பாடப்புத்தகங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். நம்மவர்களே இப்பொழுது தம் பிள்ளைகளை தமிழ்பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர் என்பது இன்னொரு வேதனை! இது அவர்களின் குற்றமும் இல்லை. தமிழ்ப் பள்ளிகளின் குற்றம். தரம் இருந்தால், எந்த ஒரு பொருளுக்கும் தேவை (demand) இருக்கும். இந்த நிலையில், தமிழர்கள் மத்தியில் தமிழ் கற்பவர்கள் குறைவு. அப்படி கற்பவர்கள், ஆறாம் வகுப்பிற்கு மேல் அதை தொடர்வது அதைவிட குறைவு! காரணம், அரசாங்கத் தேர்வுகளில் தமிழ் வினாத்தாட்களை திருத்தும் ஆசிரியர்களின் போக்கு. தமிழ் மொழியில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்தால் இந்த உண்மை புரியும். ஆறாம் படிவத்தில் தமிழ் மொழி தாளுக்கும் மற்ற மொழி தாட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்!


இங்கே, எந்தப் பள்ளியிலும், ஆறாம் படிவத்துக்கான வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால். இன்னமும் நிறைய மாணவர்கள் ஆறாம் படிவத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றனர்?!


தமிழ் மொழி தேர்வில் தோற்றவர்கள்தான் அதிகம் எனும் நிலையில், தமிழை ஒரு பாடமாக எடுக்க எந்த ஒரு சராசரி மாணவனும் முன்வர மாட்டான். தமிழ் சோறு போடாது என்பது போய்.. இப்பொழுது தமிழ் ‘மார்க்’ போடாது என்றாகி விட்டது! இது தமிழ் தாட்களை தாயாரிப்பவர்களும், திருத்துபவர்களும் இம்மண்ணில் புரிந்த சாதனை. இன்னும் கொஞ்ச நாட்களில் யாருமே தமிழ் தாட்களின் பக்கம், மறந்தும் தலை வைக்கக் கூடாது என்ற எண்ணமோ! அவர்களுக்கு பிறகு, அந்த பதவிகளே இருக்கக்கூடாது என்ற ‘பெரிய’ மனமோ தெரியவில்லை.. ஆனாலும், தமிழ் ‘செடி’யல்ல.. விருட்சம்..!

(தொடரும்)