தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Saturday, February 28, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 10

பாகம் ஒன்று

• முடிவு

கவிதைக்கு உயிராய் இருப்பது பாடுபொருள். உடலாய், அலங்காரமாய் அழகு சேர்ப்பது சொற்கள். இது இரண்டும் ஒருங்கே அமையப்பெற்றால், கவிதை கருத்தில் நிற்கும். காட்சி ஒன்றானாலும், காணும் கண்கள் வேறுபடும்போது.. கருத்தும் வேறுபடுகிறது. நல்ல கவிதைகள் கூட, கற்போரின் தகுதிக்கேற்ப, அவரவர் நிலையில் வேறு வேறாய் அர்த்தப்படுகின்றன. எனது சக்திக்கும், இரசனைக்கும், கருத்துக்கும் உட்பட்ட மூன்று கவிதைகளை இங்கே நான் பரிசுக்குரிய கவிதைகளாகவும், சில கவிதைகளை கவனத்தை ஈர்த்த கவிதைகளாகவும் தேர்ந்தெடுத்திருக்கின்றேன். இதில் மற்ரவர்களுக்கு முரண் இருந்தால், அதுவும் ஆரோக்கியமானதுதான், வரவேற்கப்படவேண்டியதுதான். சர்ச்சைக்குப் பின், தர்க்கத்துக்குப் பின் ஒரு புதிய தெளிவு பிறக்கும். அதை அனைவரும் அகன்ற மனதோடு ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.
நாட்டில், தமிழ் வாழ வேண்டும். தமிழ் இலக்கியங்கள் பல உருவாகி வாழ வேண்டும். வழி காட்ட வேண்டும். இன்னும் நிறைய இளம் கைகள் கவிதை எழுத தன் பென்சில்களை தீட்ட வேண்டும், பேனாக்களில் மையூற்ற வேண்டும்.

வாழ்க தமிழ்! வளர்க புதுக்கவிதை இம்மண்ணில்!!

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 9

• சிறப்புப் பரிசு.

பல்கலைக்கழகங்களில், கல்விப் புதையலை தோண்டச் செல்லும் நம் மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெறும் மிகச் சாதாரண விஷயங்களைச் சொல்லி, அவர்கள் செய்யும் சின்னச் சின்னச் செலவுகளில், செலவழிப்பது சில்லரைக் காசுகள் என்றாலும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் பெற்றோரின் பெரிய பெரிய தியாகங்களை அழகாகச் சொல்லி இருக்கிறார், கவிஞர். தன்னை ஒரு ஆணாக உருவகப் படுத்தி எழுதியிருந்தாலும், “வானொலி வாங்க கூட்டுப்பணம் பிடித்தபோது”, “அலுக்காமல் அலங்கரித்துக்கொண்ட போது”.. என்ற வரிகளில்.. தன்னையும் அறியாமல், தான் ஒரு பெண் கவி என்பதை காட்டிக்கொடுத்து விடுகிறார். இருந்தாலும், கவிதையின் முடிவில், ஈன்றவளின் (பெற்றோரின்) தியாகத்தை எதார்த்தமாக சொல்லி, சட்டென்று நம்மை நெகிழ வைக்கிறார். கவிதையும் நெஞ்சில் நிற்கிறது.. கணக்கிறது!

முடியாது போடா...!

வெறுமை படரும்
ஹாஸ்டல் அறையில்
வைக்க
வானொலி வாங்க
கூட்டுப் பணம்
பிடித்த போது
தெரியவில்லை...!

பந்தாவுக்காக
நண்பர்கள்
மத்தியில்‘பிளாஞ்சா’
பண்ணும்போதும்
அறியவில்லை...!

காதலிக்காக
கஞ்சத்தனம்
இல்லாமல்
காசை
வாரி இறைத்தபோது
சத்தியமாய்
நினைவில்லை..!

தவறாமல்
சாப்பிட்டபோதும்..
அலுக்காமல்
அலங்கரித்துக்
கொண்ட போதும்...
எண்னவில்லை -
நான்என் வசமில்லை...!

ஒரு மாலைப் பொழுதில்
டாக்சி பயணம்...

‘முடியாது போடா,
நாலு வெள்ளித்தான் தருவேன்’
சீனனுடன்
சண்டை போட்ட
மூதாட்டியைப் பார்த்தவுடன்
பொட்டில் அடித்தது...

டாக்ஸி ஏறினால் பணம் செலவாகும்
என்று
நடந்தே
வீடு வந்து சேறும்
அம்மா!
-செ.ராஜேஸ்வரி
சுங்கைப்பட்டாணி
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 8

பரிசுக்குரிய கவிதைகள்
• முதல் பரிசு

காதல் என்பது பொதுவுடமை. இன்றைய காதல் இளையோர்களுக்கு மட்டுமே என்ற வழக்கமான சிந்தனைகளைத் தாண்டி ஒரு கவிதை! நமது இன்றைய நிலையையும், சமுதாயத்தில் காதல் படும் பாட்டையும், தள்ளாத வயதில் பெற்றவர்களுக்கு துணை ஒன்று தேவை என்று புரிந்துகொள்ளக்கூட நேரமில்லாத பிள்ளைகளின் கன்னங்களில், ‘பளார்’ என அறைந்தார்போல் அந்த தேவையின் நியதியை, காதலின் ஆழத்தை உணர்த்துகிறது இந்தக் கவிதை. வாழ்க்கையின் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, உண்ண உணவும், உடுக்க உடையும் மட்டும் போதும் என்று எண்ணுபவர்களுக்கு, இது ஒரு நல்ல சாட்டை அடி! பிள்ளைகளிடம் பெற்றவர்கள் சொல்லியழ முடியாத துயரத்தை, தவிப்பை கவிஞர் கவிதையாய் வடித்திருக்கிறார்.. நமது பண்பாட்டின் கண்ணாடிச் சுவர்களை உடைத்தெரியாமல்..

நம்ம காதல்
உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

கித்தா தோப்பில்
ஏணி வெட்டுவெட்டியபோதும்..

ஓடிப்போயி
மாரியம்மன் கோயிலில்
தாலி கட்டியபோதும்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

பிள்ளைப் பொறப்புக்கு
நீ அம்மா வீட்டுக்குப்போனப்பவும்...
மூனு பிள்ளைங்களை பெத்து
முப்பது செஞ்சப்பவும்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
காதல்தான்..!

பிள்ளைங்க வளர்ந்து
படிச்சி பாஸ் பண்ணி
வேலைக்குப் போனப்பவும்..

ஜோடியோட வீட்டுக்கே
வந்து நின்னப்பவும்...

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்காதல்தான்..!

காலம் மாறி
பருவம் மாறி
உருவம் மாறி போயி...

நீ மகள் வீட்டுலேயும்
நான் மகன் வீட்டுலேயும்
இருக்கறப்ப மட்டும்...

புரியவே இல்லை
பிள்ளைங்களுக்கு
நம்ம காதல்!

காதலர் தினம்
காதலுக்கு தானாம்
உலகமே சொல்லுது..!

நாம மட்டும்
ஒருத்தரை ஒருத்தர்
பார்க்க முடியாம..

ஒன்னா இருக்கலாம்
வா செல்லம்மா
முதியோர் இல்லத்துக்கு!

ஊருக்கும் உலகத்துக்கும்
புரிய வைப்போம்..

உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
உள்ள உண்மையான காதலை!

- இராம.சரஸ்வதி, பத்துகேவ்ஸ்

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 7

கவிதையில் வேற்று மொழிகள்

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கவிதைகளில், ஒரு சில நல்ல கவிஞர்கள் கூட, தமிழ்க் கவிதையில் அளவுக்கும் அதிகமாக அண்ணிய மொழியை சேர்த்து எழுதுவதைக் காண முடிகிறது! நல்ல கருத்து, சொல்லாட்சி, அழகியற்கூறுகள், எதார்த்தம்.. எல்லாம் இருந்தும்.. அண்ணிய மொழியின் ஆதிக்கம் ஒரு சில கவிதைகளின் தரத்தைக் குறைத்திருக்கிறது! சினிமா பாடல்களிலேயே அண்ணிய மொழி கலக்கக் கூடாது என்று போர்க்கொடி தூக்கும் நம்மவர்களுக்கு, இந்த கவிதைகளின் பால் ஈடுபாடு வருமா? உதாரணத்திற்கு, இந்த கவிதை:

நாங்க எல்லாம் மாறிட்டோம்
அதானால் பாதகமில்லை...

சமைக்கத் தெரியுமா?
எல்லார் துணிகளுக்கும்
‘வாஷிங் மிசினாய்’
இருக்கத் தெரியுமா?

‘இரவின் மடியில்’
நிலாப் பாடல்களை மறந்து
‘ஆராரோ ஆரிராரோ’
ஆலாபனை செய்து
‘டைமிங்’கோடு பாடத் தெரியுமா?

‘அண்ணாமலை’
‘மெட்டி ஒலி'களை மறந்து
குழந்தைக்கு
‘சூசூ’ கலக்கத் தெரியுமா?

தொட்டில் ஆட்டத்தெரியுமா?

மடிப்புக் கலையாமல்
‘ஐயன்’ போடத் தெரியுமா?

அனாமதேயக் ‘க்கால்’களை
‘க்கட்’ பண்ணத்தெரியுமா?

கஞ்சப் ‘பிஸ்னாரி’யாக
வாழும் முறைதெரியுமா?

அலுவலகத்தில்
'டப்புவே'யை
'யூஸ்' பண்னத் தெரியுமா?

வீடு வந்ததும்
கூட்டிப் பெருக்க தெரியுமா?

அந்தக் காலம் போல் இல்லை...
அதானால் பாதகமும் இல்லை...

எதற்கும்
தெரிந்து வைத்துக் கொள்
நண்பா..!
-ஏ.தேவராஜன் ஜாசின்.

கவிதை படிப்பதற்கு கலகலப்பாக இருந்தாலும்.. இது தமிழ்க் கவிதையா என்ற சந்தேகம் கூடவே எழுகிறது! இதையே மற்றவர்களும் பின் தொடர்ந்து எழுத ஆரம்பித்துவிட்டால் என்னவாகும்? இது இளைஞர்களுக்காக எழுதப்பட்டது என்றாலும்.. இன்னும் கொஞ்சம் தமிழ்ப் படுத்தி எழுதியிருக்கலாம் என்பதே என் கருத்து.

இன்னும் இருக்கிறது..

Sunday, February 22, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 6

குட்டிக் கவிதைகள்

இந்த நான்கு மாத காலத்தில் வெளிவந்த கவிதைகளில் 70 சதவிகிதம், குட்டிக் கவிதைகள். சொல்ல வந்த கருத்தை ‘சுருக்’கென்று சொல்லிவிடும் கவிதைகள். இவற்றில் 80 சதவிகிதம் கருத்தில் நிற்காத காதல் கவிதைகள் என்றாலும், ஒரு சில கவிதைகள் மனதில் ரோஜா முள்ளாக ஒட்டிக்கொள்ளவே செய்கிறன. இதோ, சில உதாரணங்கள்:

வயிற்றெரிச்சல்!
ஓட்டுப்போட
போனா
பேரையே காணோம்!

எந்தப் பெட்டிக்குள் போடுறது
என்
வயிற்றெரிச்சலை!
-புயல், ரவாங்

ஆவியின் ஜாதி..
இறந்தப் பின்னும் சமாதியில்...
ஜாதிப் பெயர்கள்.

ஆவியையும்
விட்டுவைப்பதில்லை
இவர்கள்!
-தயா யு.பி.தோட்டம்.

நிகழ்காலம்
அன்று
எங்களுக்குப் பெயர்
சொல்லபில்லைகள்
பிள்ளைகள் வேண்டும்
என்றோம்!

இன்று
பிள்ளைகள் தயவில்
எங்கள் முகவரி
முதியோர் இல்லத்தில்!...
-வசந்த முல்லை, புக்கிட் மெர்தாஜாம்

வேண்டாம்
பெண்களை பூக்களோடு
ஒப்பிடாதீர்கள்..

பூக்களெல்லாம்
இரத்தக் கண்ணீர்
வடிப்பதில்லை!

பெண்களை
நிலவுடன் ஒப்பிடாதீர்கள்..

நிலவு,
பாலியல் கொடுமையால்
இம்சிக்கப் படுவதில்லை!
-ச.விக்னேஸ்வரி, தாப்பா ரோட்

கடுகு சிறுத்தாலும் காரமற்றுப்போகுமா? கவிதை சிறுத்தாலும் கருத்தைக் கவராமல் போகுமா?! அவசர உலகத்தில், வாழ்க்கை சுறுசுறுப்பு ரயிலில் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்துப் பக்க கவிதைகளில், இதுபோன்ற கருத்துக்களைச் சொன்னால், பொறுமையுடன் நம்மால் படித்துக்கொண்டிருக்க முடியுமா? இல்லை, எழுதிக் கொடுக்க கவிஞனுக்குத்தான் நேரமிருக்கின்றதா?

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 5

ஹைக்கூ கவிதைகள்

இதே காலகட்டத்தில், ஹைக்கூ கவிதைகளும் ஓரளவுக்கு வந்திருந்தன. மூன்றே அடிகளில் ஏழு உலகங்களை அளந்தார் ஸ்ரீகிருஷ்ணர், வாமணராக. மூன்று நான்கு அடிகளில் கருத்தை கவர்ந்து, கவனத்தை ஈர்க்கின்றனர், ஹைக்கூ கிருஷ்ணர்கள்! நாடு கண்டு வரும் முன்னேற்றத்தையும், தமிழ்பள்ளிகளின் இன்றைய நிலையையும் மிகச் சுலபாமாக, அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு, அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் செர்டாங், ஆர்.சரவணன் இந்த ஹைக்கூவில்..

"தேசிய தினம் 47
உயர்ந்து நிற்கிறது
இரட்டைக் கோபுரம்
அண்ணாந்து பார்க்கிறது
தமிழ்ப்பள்ளி! "

இன்னும் சில நல்ல ஹைக்கூ கவிதைகள் இனையத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன, இவற்றைப்போல்:

சகுனம் பார்க்கும்
கணவனிடம்
எப்படித் தெரிவிப்பது
பூனை வளர்க்கும் ஆசையை?”

***
ஒரு கொசு
உயிரை விட்டது
ஜீனகாருண்ய
புத்தகத்தில்!”

உலகமெலாம் தமிழோசை பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான் பாவேந்தன். அதற்கேற்ப, இணையத்தின் வழியும் நல்ல விஷயங்களை தமிழ் வழி படிக்கின்ற வாய்ப்பும் இப்பொழுது இருக்கின்றது. உலகமே உள்ளங்கை அளவு குறுகிவிட்டது இணையத்தின் இயக்கத்தால். இணையத்தில் வரும் இதுபோன்ற ஒரு சில கவிதைகளை வாசகர்களின் வசதிக்காக இதழாசிரியர்கள் அவ்வப்போது பிரசுரிக்கிறார்கள். இறக்குமதி கவிதைகள் என்பதால், இவற்றையும் நாம் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை. இருந்தாலும், நல்ல கவிதைகள் இவை என்பதால், யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறவேண்டும் என்ற நோக்கிலே, இவற்றையும் உங்கள் பார்வைக்கு படைக்கிறோம்.

(இன்னும் இருக்கிறது)

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை (2006) - பகுதி 4

புதுக்கவிதையில் வர்ணனை

புதுக்கவிதையின் முப்பெறும் உத்திகளில் ஒன்றான படிமமும் இந்த காலக்கட்டத்தில் வெளிவந்த கவிதைகளில், திறம்பட கையாளப் பட்டிருக்கின்ற்றது. இயற்கையை வர்ணிப்பதிலும் காதலை பாடும்பொழுதும், படிம உத்திகளை நிறைய கவிதைகளில் காணமுடிகிறது. பத்துமலையின் அழகினை, ஒரு கவிஞன் அழகாய் உருவகப் படுத்தி இருக்கிறான்:

“நடுக்குகையின் உச்சியில்
வானம் பார்க்க
வெற்றுக் குடை
விரித்திருக்கிறது
இயற்கை..!
-சந்துரு, சுங்கை திங்கி தோட்டம்
வர்ணனை இல்லாத காதலா? படிமம் இல்லாத காதல் கவிதையா? இந்த 121 நாட்களில் வந்த கவிதைகளில் எத்தனையோ வித்தியாசமான, வியக்கவைக்கும் அழகான வர்ணனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம், இது போல:

“அவசரமாய்
ஒரு காதல் கவிதை வேண்டும்..
காதலர் தினமாம்
கேட்கிறார்கள்..

ஏது எழுதுவது
நான்...?

உன் பார்வையில்
கவிழ்ந்து போன
கர்வத்தோடும்...
உன் புன்னகையில்
பூப்பெய்திய புலன்களோடும்... “
-செ.ராஜேஸ்வரி (சுங்கைப்பட்டாணி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி)

“உன் பார்வையில் கவிழ்ந்து போன கர்வத்தோடும்... உன் புன்னகையில் பூப்பெய்திய புலன்களோடும்...” எனும் வர்ணனை வரிகள், நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கின்றன.

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக் கட்டுரை - பகுதி 3 (2006)

இண்டெர்நெட் காதல்

கணினி தொழில்நுட்பம், காதலையும் விட்டு வைப்பதாக இல்லை. ‘சாட் ரூமில்’ முகம் தெரியாமலேயே தினம் தினம் நூற்றுக்கணக்கான காதல் பூக்கள் மலர்ந்துகொண்டிருக்கின்றன, நிமிடத்துக்கு நிமிடம். இதில் சில பூக்கள் மணம் வீசி மகரந்தங்களை பரப்பினாலும், பெரும்பாலான காதல், காமத்துக்காகவே என்றாகிவிட்டது. இதில் வேதனை என்னவென்றால், சில வேலைகளில்.. இந்த கவிதையை படித்துப் பாருங்கள்:

இண்டெர்நெட் காதல்!
இண்டெர்நெட்
காதல் வைரஸ்
ஆயிரம் வாட் ஈர்ப்பு..
சந்தோசம்..
பூர்வ ஜென்ம பந்தம்
வார்த்தை ஜாலம்
நேரில் காணாத வரை..!
கண்டதும்
வேதனை
ஏமாற்றம்
குற்ற உணர்வு..!
அப்பனும் மகளும்!

-சா.வேலா, மாசாய்


புதுக்கவிதையில் சமுதாயச் சிந்தனைகள்

ஒரு கவிஞன் சமுதாயச் பிரச்சனைகளை எழுத, தன் எழுதுகோலுக்கு மையூற்றுகிறானோ, அப்பொழுதுதான் ‘கவிஞன்’ என்கிற அங்கீகாரம் அவனுக்கு தரப்படுகின்றது. பிரச்சனைகளை கண்டு வெறுமனே புலம்பிக்கொண்டிருக்காமல், தூங்கிக்கொண்டிருக்கும் சமுதாயத்தை கவிதைச் சாட்டையால் ஓங்கி அடித்து எழுப்புபவன்தான் கவிஞன். இதைச் செய்ய கவிஞனுக்கு ஒரு தெளிந்த சிந்தனை தேவை. தைரியம் தேவை. அரசியல் வாள்கள் இவர்களின் கைகளை அறுத்தெரிய, பேனாக்களை பொடிப்பொடியாக்க காத்துக்கொண்டிருக்கும். இலக்கியமும் போர்க்களம்தான்.

இந்த ஆய்வுக்காக நான் எடுத்துக்கொண்ட புதுக்கவிதைகளில் ஏறக்குறைய 15 விழுக்காடு கவிதைகள், இதுபோன்ற சமுதாயச் சங்கதிகளை உள்ளடக்கியிருந்தவை. மாதச் சம்பளப் பிரச்சனை, பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு பிரச்சனை, ஜாதிப் பிரச்சனை, அரசியல் சீர்கேடுகள், வட்டி முதலைகள்.. இப்படி என்னும் எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகளை, இந்த கவிதைகளில் பலவித கோணங்களில் படம் பிடித்துக் காட்டியிருந்தனர்.
எங்களின் ஒட்டுமொத்த இளைஞர் கூட்டமே, கூனிக் குறுகி வளைந்து கிடக்கும் முதுகெலும்போடு வாடிக்கிடக்கிறது. அந்த வாடிய பயிர்கள் வீறு கொண்டு எழ ‘வியாக்ரா’ வேண்டும் என ந.பச்சைபலனின், “வேண்டும் வியாக்ரா..” கவிதை நெஞ்சில் நிற்கிறது.
“எங்கள் பொருளாதாரக் கோடுகள்
பூஜ்யங்களை நோக்கியே
புன்னகைக்கின்றன..

எங்கள் கல்விக்கோடுகள்
மகஜர்களோடு
மல்யுத்தம் நடத்துகின்றன..

ஒட்டு மொத்தமாய்
எங்கள் இளைஞர்களின்
முதுகெலும்பைத் தடவிப்பார்த்தேன்..

எல்லாம்
வளைந்து வளைந்து
குனிந்தே இருக்கின்றன

இனி சிட்டுக்குருவி லேகியத்தாலும்
நாங்கள்
சமாதானமடைய சாத்தியமில்லை
வியக்ரா வேண்டும்..

இந்த கவிதை இன்றைய இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு ‘வியாக்ரா’வாய் புத்துணர்வு ஊட்டியிருக்கும், ஒரு சில நிமிடங்களுக்காவது! கவிதையில், கவிஞரின் சொல்லாட்சி தெரிகிறது. கைகொடுத்திருக்கிறது. இருந்தாலும், கவிஞர் வியாக்ராவை விவரிக்காமலேயே விட்டு விட்டார். இருண்மைப் பண்பில் இவர் சொல்லி இருக்கும் ‘வியாக்ரா’ எதுவென்று, தொலத்துவிட்ட வாழ்க்கையை தேடி குனிந்து கிடக்கும் இளைஞர்களுக்கு விளங்குமா?

இன்றைய சூழ்நிலையில், நம்மவர்களின் பொருளாதார வலிமை என்ன என்பது அனைவரும் அறிந்ததே! நிலைமை இப்படி இருக்க, கல்வி ஒன்றினால்தான் சமுதாய மேம்பாடு கிடைக்கும் என்ற கட்டாயம். அந்த நம்பிக்கையும் நசுங்கிப்போகும் வகையில் நாட்டின் பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பு முறை! இந்த சமூக பிரச்சனையையும், கவிஞர்களின் பேனாக்கள் படம் பிடிக்க தவறவில்லை. சிலர் நாசுக்காக சொல்லியிருக்கின்றனர்.. ஒரு சிலர், சிதறு தேங்காயாய் பட்டென்று போட்டு உடைத்திருக்கின்றனர், இந்த கவிதை போல..

“கல்விக் கசடற கற்றும்
ஊசி போட
ஒருத்தனுக்கே இடம்...”
(தலைமையா.. இயலாமையா.. : வீர. இராமன், சிம்பாங் ரெங்கம்)

ஆதங்கத்தை வெளிப்படுத்துவது மட்டும் கவிஞர்களின் வேலையல்ல. அதற்கான தீர்வையும் தீர்க்கமாக சொல்ல வேண்டிய கட்டாயம், அவன் கவிதைகளுக்கு உண்டு. அப்படி, இந்த நான்கு மாத கவிதைகளில், தீர்க்கமான கருத்துக்களை அதிகம் காண முடியாதது வருத்தம் தான்! இனி வரும் காலங்களில், இந்த நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்.

மாதச் சம்பளப் பிரச்சனையைச் சொல்ல வந்த கவிஞர்கள் பலர் தங்களுடைய பேனாக்களில் கண்ணீரூற்றி எழுதிருந்தனர்.. ஒரு சிலர் நெருப்பினால் சுட்டு சுட்டு எழுதியிருந்தனர். ஏழை பாட்டாளி மக்களுக்காக, அவர் படும் இன்னல்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளில், தோட்டப்புற வாழ்க்கையை படிமம் மற்றும் குறியீடு போன்ற உத்திகளில் மெருகேற்றி இருந்தனர். பட்டணத்தில் இருக்கும் பலரை, அவர்களின் நினைவலைகளை இந்த கவிதைகள் அவர்களின் கடந்த காலங்களை கண் முன்னே நிறுத்தி இருக்கும். அவர்களின் இன்றைய பிரச்சனைகளை உணர்த்தியிருக்கும்!

ஒரு கவிஞர், தனது கோபத்தை தனை வளர்த்த மண்ணின் மீது காட்டுகின்றார். பொறுத்துக் கொண்டிருப்பதே பூமித்தாயின் குணம் என்பதாலோ என்னவோ..

“இந்த மண் ருசி
தெரிந்து வைத்திருக்கிறது..
வேண்டியவர்களுக்குப்
பழத்தையும் தானியத்தையும்
தருகிறது!
எங்களுக்கு
அருந்த முடியாத
ரப்பர் பால்!”
-(ரப்பர் பால்: சை.பீர்முகம்மது)

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முன்னூறு ரிங்கிட் மாதச் சம்பளம் என்பது, நாட்டின் வறுமைக் கோட்டுக்கும் கீழே என்பதுதான் அது! அந்த முன்னூறு ரிங்கிட் சம்பளத்தைக் கூட தர தோட்ட முதலாளிகள் சங்கம் மறுப்பது வேடிக்கை. நாடே பொருளாதார நலிவில் சிக்குண்டபோது, ஒரே ஒரு துறை மட்டும்.. பன்மடங்கு இலாபத்தை ஈட்டியது! நிர்வாகத்துறையினருக்கு பல மாத போனஸ¤களும் கிடைத்தன. அதுதான் தோட்டத் தொழில்துறை. அமெரிக்க டாலரின் ஏற்றத்தோடு, செம்பனை மற்றும் ரப்பர் விலைகளும் அனைத்துலக சந்தையில் ஏற்றம் கண்டது. இலாபகரமான தொழிலாக இன்னமும் இருந்து வருகிறது. இருந்தும் மாதச்சம்பளப் பிரச்சனைக்கு மட்டும் இன்னமும் சுமூகமான தீர்வு ஒன்று பிறந்தபாடில்லை! பிறந்துவிட்டால், அரசியலில் சாதிக்க, சண்டை போட, அரசியல் நடத்த வேறொன்றும் இல்லாமல் போய்விடுமே என்ற அச்சமோ? தொழிலில் பன்மடங்கு இலாபங்கள் தோட்டங்களின் கூரைகளில் கொட்டிக்கொண்டிருக்க, ஒழுகும் கண்களுடன் தொழிலாளி! வெறும் முன்னூறு ரிங்கிட் மாதச்சம்பளம், அதைத் தீர்த்துவைக்க ஆளில்லாமல் ‘இழுவை’யில் நிற்கின்ற அவலத்தை..
“பால்தோட்ட பிதாக்களே!
இழுவையில் நிற்பது
‘முன்னூறா..
ஓய்ந்து போகாத ஏழையின்
கண்ணீரா...?”

என்ற ப.அ.சிவத்தின் வரிகள், ஏழைகளின் வேதனையை நமக்கு இனம் காட்டுகின்றன. நம் இளம் தொழிலதிபர்களை உலுக்கி எடுத்த இன்னொரு பிரச்சனையும் இந்த காலக்கட்டத்தில் அதிகம் பேசப்பட்டது. வட்டி முதலைகள். இந்த பிரச்சனையையும் படம் பிடித்து காட்டியிருந்தன ஓரிரு கவிதைகள், இப்படி:

“முதலை கூட இறந்துவிட்டால்
முதுகுதோல் பயன்படுமாம்..
வட்டி முதலை இறந்துவிட்டால்
கழுகுந் தின்ன பயப்படுமாம்!”
-(கலிகால அசுரன்: ஆர்.சரவணன், செர்டாங்.)
பி.கு: தோட்டத் தொழில் துறை நல்ல இலாபத்தை ஈட்டுகிறது என்று சொன்னேன். அன்று அது (2005) உண்மை. இன்று அந்த துறை சற்று பின்னடைவை எதிர் நோக்கியிருக்கிறது என்பதும் உண்மை..)
(இன்னும் தொடரும்)

Monday, February 16, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 2 (நவம்பர் 2006)

இந்த நிலையிலும் தாய்த் தமிழைத தவறாது கற்பவர்களை நாம் மனமார பாராட்டத்தான் வேண்டும். கவிதை எழுத ஆர்வத்தோடு பேனா பிடிக்கும் அந்த கரங்களோடு கைகுலுக்கத்தான் வேண்டும். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், தென்றலில் வெளிவந்த ஒரு கவிதை!


Nii Illaamal...

Malai illaamal Niir Illai...

Kadal Illamal Alai Illai...

Kilai illamal ilai illai...

Pagal illaamal iravu illai...

Suvaasam illaamal uyir illai...

Uyir illaamal yaavum illai...

Nii illaamal naan illaai endrum!

-Bintang 2003, Seremban


ஆங்கில எழுத்துக்களை (Romanised Tamil) கொண்டு தமிழ்க் கவிதை! இது கவிதையா இல்லையா - விவாதிப்பதில் விருப்பமில்லை எனக்கு. இது போன்ற படைப்புக்கள் வெளிவர தொடங்கிவிட்டன. இந்த நிலைக்கு யார் காரணம்? தமிழில் எழுத படிக்க, கற்க வேண்டும் எனும் ஆவல் ஏற்படாமல் போனதற்கு யார் காரணம்?

இத்தனை சிரமங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் புதுக்கவிதை தன் சிருங்கார சிறகுகளை விரித்து இலக்கிய வானில் இளைப்பாறாமல் பறக்கிறதென்றால்.. அதன் பெருமை, எங்கள்இளைய தேசத்துஇலக்கியவாதிகளையே சாறும். நல்ல கவிதை எழுதுபவர்களில் பெரும்பாலானோர், தமிழாசிரியர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் மரபை எழுதி பெயர் வாங்கிய கவிஞர்களும், புதுக்கவிதையின் வேருக்கு கொஞ்சம் உரமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி!!!

இலக்கிய களவுகள்
ஒரு சில கவிதைகளை படிக்கும் போது, “எங்கோ படித்தது போல இருக்கிறதே!” என்ற எண்ணம் தோன்றுகிறது. உதாரணத்திற்கு;

காதலித்துப்பார்
காதலித்துப் பார்- கதைகள் சொல்வாய்...
காதலித்துப்பார்- மழையும் மாளிகையாகும்
காதலித்துப்பார்- பாதங்களால் பாலம் கட்டுவாய்

இப்படி ஒரு கவிதையை, ஜொகூர் மாச்சாயிலிருந்து வீரா. இராமன், எழுதியிருந்தார். வைரமுத்துவின்இந்த பூக்கள் விற்பனைக்கல்லபுத்தகத்தை படித்தவர்களுக்கு, இதே தலைப்பில் அவர் இயற்றிய கவிதை நிச்சயம் நினைவுக்கு வரும்! இது இலக்கியத் திருட்டா அல்லது வைரமுத்துவின் தாக்கமா? சில வேளைகளில், இது போன்ற கவிதைகள் இதழாசிரியர்களின் கண்களில் கறுப்பைத் தடவி, விடிந்துவிடுகின்றன!

(திரு வீரா.இராமனுக்கு வயது அப்போதே ஐம்பது இருக்கும் என்பதை அவரில் இக்கருத்தரங்கில் நேரில் சந்தித்த போது உணர்ந்தேன்! அவர் தொடர்ந்து சொந்தமாக எழுத வேண்டும் என்பதே எனது அவா..)


கவிதைகளில் ‘சினிமா’ சாயல்
இந்த 121 நாட்களில் வெளிவந்த கவிதைகளை அலசிப்பார்க்கும் பொழுது, சினிமா பாடல் வரிகளை காப்பியடித்து, மாற்றியமைத்து வெளிவந்தபடைப்புக்களும்நிறையவே காணப்பட்டன. காப்பியடிப்பது கூட திறமைதன். ஆனால், அதைக்கூட சிலர் ஒழுங்காய்ச் செய்யவில்லை! இதோ ஒரு உதாரணம்:


பொறுப்பு
என் இனிமைக்கு நீ பொறுப்பு
என் தனிமைக்கு நீ பொறுப்பு
என் கனவுக்கு நீ பொறுப்பு
என் கண்ணீருக்கும் நீ பொறுப்பு..

உன் மலர்ச்சிக்கு நான் பொறுப்பு
உனை மணமுடிப்பதென் பொறுப்பு
உன் இரவுக்கு நான் பொறுப்பு
கனவுக்கு நான் பொறுப்பு!

-ஏஞ்சல் பொண்ணு, பூச்சோங்

அந்த வரிகளில் ஒரு சினிமா பாடல் தெரிகிறதே தவிர, கவிதை கடுகளவும் இல்லை! இதுபோன்ற நிறைய கவிதைகள் இந்த நான்கு மாதத்தில் வெளிவந்திருந்ததால், அவற்றையும் ஆய்வுக்கு நான் எடுத்துக்கொள்ளவில்லை.


ஆயின், நான்கு மாதங்களில் நல்ல படைப்புக்களே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருந்தன! புற்கள் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும், நெற்கதிர்கள் அதைவிட உயரம் என்பதால் அவற்றை கண்டுகொண்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ளவில்லை நான்.

புதுக்கவிதைகளில் உத்திகள்
இந்த நான்கு மாத கவிதைகளை வாசித்துப் பார்க்கும்பொழுது, என்னையும் அறியாமல், என் விழிகள் ஒருசில கவிதைகளை மொய்க்கத் தவறவில்லை. கவிஞர்களின் சிந்தனாசக்தியையும் அவர்கள் கையாண்ட உத்திகளையும் கண்டு நம் நாட்டிலும் எத்தனையோ படைப்பாளிகள் இலைமறைகாயாகஇருப்பது கண்டு மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. ‘காய்கள்பழுத்தால், அதன் வாசமே அவற்றுக்கான முகவரியாகிவிடும் என்பதே என் கருத்து.

இந்த பெருமைக்கும் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து நடத்தி வரும் புதுக்கவிதை திறனாய்வு கருத்தரங்குகள் முக்கிய காரணம் என்பதை இந்த கருத்தரங்களில் கலந்து கொள்பவர்கள் மறுக்க மாட்டார்கள். டாக்டர் வே. சபாபதி அவர்களின் பங்கையும் யாரும் மறக்க மாட்டார்கள். நன்றி மறப்பது, தமிழுக்கும் தமிழனுக்கும் தெரிந்திராத ஒரு பண்பு!

ஏனோதானோ என எழுதிய காலம் இப்பொழுது சற்று மாறத்தொடங்கி இருக்கிறது. அதற்கு, இந்த நான்கு மாதத்தில் உள்ளூர் புதினங்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த கவிதைகளில் என் கவனத்தை ஈர்த்திழுத்த இந்த வரிகள் சான்று.

முரண்
காதல் பிடிக்காதவன்..
கவிதைக் கருத்தரங்கில்
முதல் வரிசையில்...!

கரு
இருவர் பசியாறலில்
ஒருவர் வயிறு நிரைந்தது!

உறக்கம்
மரண ஒத்திகை..

கணவு வாசல்..

நீ கூட குழந்தை உருவில்..!

-(மணிராமு, சுங்கைப்பட்டாணி)

கவிஞர், முரண், குறியீடு மற்றும் படிம உத்திகளை அழகியற் கூறுகளோடு கையாண்டிருக்கின்றார். ஒவ்வொரு பாடு பொருளையும் புதிய கோணத்தில் படம் பிடித்திருக்கிறார்.

இன்னும் நிறைய கவிஞர்கள், இதுபோன்ற உத்திகளை கவனமாகவே கையாண்டிருக்கிறார்கள். முரண், இவர்களில் அநேகருக்கு கச்சிதமாய்க் கைகொடுத்திருக்கிறது. இதோ அதற்கொரு சான்று:


“மண்ணிக்க வேண்டும்
ஆழமாய் நேசித்தால்
வெறுப்பு வரும் என்கிறார்கள்
முயற்சி செய்கிறேன்
உனை வெறுப்பதற்கு!!

-நிஷா, தலைநகர்.


கவிதைகளில் காதல்
காதல் கவிஞனை பிரசவிக்கின்றது. அதனால்தானோ என்னவோ, எப்பொழுதுமே கவிதைகளில், காதல் முதன்மை வகிக்கின்றது. இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளில், 65 சதவிகிதம் காதலுக்காகவும், காதலர்களுக்காகவுமே பேனாக்களிடமிருந்து விடைபெற்றிருக்கின்றன. காதலின்பால் சிக்குண்டு தவிக்கும் இளசுகளின் அநுபவமே, பெரும்பாலும் அவர்களின் கவிதையாய் வெளிப்படுகிறது. சிலரின் கவிதைகளை படிக்கும் பொழுது, சிலிர்க்கிறது. சில கவிதைகளினால் சத்தமில்லா சிரிப்பு வருகின்றது. இன்னும் சிலரின் கவிதைகளை படிக்கும்போது, நமக்கும் காதல் வருகிறது, கவிதையின் மேல்! உதாரணத்திற்கு ஒரு வரி...


என் ஜீன்சுகளை
நனைத்திருக்கும்
அவளது கண்ணீரின் ஆழத்தில்
நான் மூழ்கிப்போனதுண்டு!”

-செல்வம் அர்ஜுனன், சுங்கைப்பட்டாணி.

காதலிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, ஆண்களை வீழ்த்த பெண்கள் பயன்படுத்துவது இரண்டு ஆயுதங்கள்: கவின் சிரிப்பு; கண்ணீர். இந்த இரு ஏவுகணைகளை எதிர்த்திடும் சக்தியும் யுக்தியும் இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையும், பாவம், கவிஞன் இவன் என் செய்வான்? அவன் சொல்ல வந்த கருத்தைஇருண்மை பண்புகலந்து கூறியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

வழக்கமான காதல் கவிதைகளையே பார்க்க முடிந்த நமக்கு, .பச்சைபாலனின்காற்பந்து ரசிகன் காதலிக்கிறான்”, என்ற கவிதை நல்ல விருந்து! குறியீடு, படிமம், அங்கதம் என்று கவிதைக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

“உனை அடைய விடாமல்
தற்காப்பு அரணமைத்து
உன் அப்பா
தடுத்துக்கொண்டே இருக்கிறார்..

மஞ்சள் அட்டைக்கும்
தகுதி பெறாத
சின்னச் சின்னத் தவறுகளுக்கு
அவசரமாய் நீட்டுகிறார் சிவப்பு அட்டை!”

என்ற வரிகள்.. அவசர அவசரமாய் அடுத்த வரிகளை படிக்கச் சொல்லி கவனத்தையும் கண்களையும் தூண்டுகின்றன.

தடையெல்லாம் தாண்டி
பெனால்டி பெட்டிவரை முன்னேறினாலும்
உன் இதய வலைக்குள்
புகுந்து விடும் யுக்தி
எனக்கு இன்னும் புரியவே இல்லை!”

வித்தியாசமான சிந்தனைகள்.. அழகான குறியீடுகள்.. மனதில் நிற்கின்றன. இதில், பெரிய கருத்துக்கள் ஒன்றும் இல்லையென்றாலும், சொல்ல வந்த விஷயத்தை, அழகியற்கூறுகளோடு சொல்லி இருக்கிறார் கவிஞர். அவருக்கு, புதுக்கவிதையின் முப்பெறும் உத்திகளும் கை கொடுத்திருக்கின்றன.

(இன்னும் தொடரும்..)

Sunday, February 15, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 1 (நவம்பர் 2006)

என்னுரை.

என்னுள்..

‘ழ’கரமாய், இலயித்துக் கொண்டிருப்பவளே....

என்னைச் சிகரமாய் செதுக்கிக் கொண்டிருப்பவளே..

தமிழே..

உன்னை உரிமையோடு வணங்கி என் உரையை தொடங்குகின்றேன்..

என்னுள் நீயிருந்து.. காப்பாய் தேவி!!


புதுக்கவிதை.

கவிஞர்கள் பலருக்கு இது ஒரு கெட்ட வார்த்தை. இளைய தலைமுறை இலக்கியவாதிகளுக்கோ, இது ஒரு போதிமரம். அவர்களின் சிந்தனா சக்தியும், கற்பனை ஆற்றலும் கூடு கட்டி வாழும் ஆலமரம்.


எந்த மொழிக் கவிதை என்றாலும், சொல்ல வரும் கருத்துக்கள் அழகியற்கூறுகளோடு (Aesthetic elements) சொல்லப்படும்போதுதான், கவிதை.. கவிதையாகின்றது. காண்போரையும் கற்போரையும் கவர்ந்து ஈர்க்கிறது. அங்கதமானாலும், படிமமானாலும், குறியீடானாலும் தொண்மையானாலும்.. இந்த உத்திகள் எல்லாம் அழகியற்கூறுகளால் வடித்தெடுக்கப்படும்போதுதான், வார்த்தெடுக்கப்படும்போதுதான், அந்த கவிதை கணக்கிறது, சுவைக்கிறது, மனதில் பதிகிறது. வார்த்தைகள் வரையும் ஓவியம்தானே கவிதை! இந்த விஷயத்தில், புதுக்கவிதை ஓரளவுக்கு வெற்றி நடை போடுகிறது என்பதுதான் உண்மை.


புதுக்கவிதை, தமிழ் தாய் கண்ணயர, களைப்பாற கட்டப்பட்ட ‘புதிய’ தொட்டில் அல்ல. அவள் வெற்றி நடை போட்டு, தமிழ் வாழும் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வசந்தமாய் பவனி வர, அமைத்துக் கொடுக்கப்பட்ட ‘புதிய’ நெடுஞ்சாலை!


கைப்புண்ணுக்கு அறுவைச்சிகிச்சை தேவையில்லை.. ஐயோடின் போதும்! எங்கள் பாமரர்களின் சோகத்துக்கு, சுகத்துக்கு, போராட்டங்களுக்கு, புதுக்கவிதை போதும்! இன்னொரு புதுக்கவிதை இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது..


ஊமை

அன்னிய மொழியின் ஆதிக்கம்..

பேசத்தெரிந்தும்

ஊமையாய் கிராமவாசி !

-யாரோ


வேற்றுமொழி தெரியாததால், வாயிருந்தும்.. நன்றாய் பேசத்தெரிந்தும்.. பேசமுடியாத கிராமவாசிகளை, பாமரர்களை.. ஊமை என்கிறார் கவிஞர். நல்ல சொல்லாற்றல் இருந்தும், சிந்தனாசக்தி இருந்தும்.. யாப்பு தெரியாத எங்கள் இளைய சகோதரர்களும் ‘ஊமை’யாகிவிட்டனர் ‘மரபு’களின் மத்தியில்!
அப்படியென்றால் புதுக்கவிதையை எப்படி வேண்டுமானாலும் எழுதலாமா? அதெல்லாம் புதுக்கவிதை என்றாகிவிடுமா? அதுவும் இல்லை..


இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளை பார்க்கும் பொழுது, பல படைப்பாளிகள், உரை நடையை உடைத்துப் போட்டு கவிதையாக்கியிருப்பது வேதனையளிக்கிறது. உதாரணத்திற்கு:

மாதச் சம்பளம்

மலை ஏறி

மரத்தைச் சீவுகிறார்கள்

மழை பாராமல்

வியர்வை சிந்துகிறார்கள்..
குறை அறியாமல்

இரவும் பகலும்

பாடுபடுகிறார்கள்..

ஆனால்

அவர்களின் குறை அறிந்தும்

ஊதியத்தை உயர்த்த மறுக்கிறார்கள்..
-(யுவனேஷ்வரன் வேலு, காராக் - நயனம் 3.3.2004)


இது கவிதையா? உரைநடையாகத் தானே தெரிகிறது. புதுக்கவிதையின் பலமே, புதிய சிந்தனைகள்தான், புதிய விஷயங்கள்தான், அழகியற்கூறுகள்தான். அவை இல்லாவிட்டால், புதுக்கவிதை என்ற வாள், இலக்கியப் போருக்கு உகந்ததாகாது! மாதச்சம்பளத்தை, அதன் முக்கியத்துவத்தை புதிய கோணத்தில் படப்பிடிக்க இவரது எழுதுகோல் தவறிவிட்டது!


உலகம் தொழில்நுட்பத்தை நோக்கி விரைவு இரயிலில் விரைந்து கொண்டிருக்க, இன்னமும் மாதச் சம்பளப் போராட்டம் நமக்கு தேவையா? அது ரப்பர் பாலாய் இழுத்துக்கொண்டேதான் இருக்கும். ரப்பர் தோட்டங்களில் கேள்விக்குறியாய் வளைந்து போனவனை தொழில்நுட்பத் தோட்டத்திற்கு புதுக்கவிதை பேனாக்கள் துரத்தவேண்டாமா? புதிய சிந்தனைதானே புதுக்கவிதை பேனாக்களின் மை!


வெறும் உரைநடையை உடைத்து போட்டு கருத்தே இல்லாத இன்னும் எத்தனையோ படைப்புக்கள், நம்மை முகஞ்சுளிக்க வைக்கின்றன. இப்பொழுதெல்லாம், புதினங்கள் சிலருக்கு தபால் நிலையங்களாக மாறிவிட்டன. டி.ராஜேந்தர் ஸ்டைலில், நிறைய வசன நடை ‘கவிதை’கள்.. இதோ இன்னொரு உதாரணம்:


முற்றுப்புள்ளி

அன்பே என் வள்ளி

தந்தேனே என் அன்பை அள்ளி

மறுத்தாயே காதலை காரணம் சொல்லி

இறுதியில் வைத்தாயே என் மனதில் கொள்ளி

ஆக மொத்தம்நம் காதலுக்கு முற்றுப்புள்ளி!

(நியூ சிட்டிசன், ஜாசின்)


இதுபோன்ற படைப்புக்களையும் இதழாசிரியர்கள் பிரசுரிக்கத்தான் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களை... கவிதை எழுத ஊக்குவிக்கிறார்களோ...?! இதுவே வாடிக்கையாகிவிடாமல் இருந்தால், கவிதை பிழைக்கும்.


இன்னும் ஒரு சிலர், பொன்மொழிகளை உடைத்துப்போட்டு, கவிதையாக்க முயன்றிருக்கிறார்கள்! ஒன்றன்கீழ் ஒன்றாக உரைநடைகளையும், பொன்மொழிகளையும் உடைத்துப்போடும் இது போன்ற ஒரு சிலரால்தான், புதுக்கவிதை எனும் வார்த்தையே ஒரு சிலருக்கு பிடிப்பதில்லை! உதாரணத்திற்கு:


பிரச்சனை!

பிரச்சனைகளைத் தீர்ப்பவன் தெம்படைகிறான்

சினம் கொள்பவன்அமைதி இழக்கிறான்..

சிந்தித்துச் செயல்பட்டால்
மன அமைதியும் நிம்மதியும்

நிரந்தரமாகி விடும்!

-வெற்றி இதழில் வந்த ‘கவிதை’.


ஏதோ, காலண்டரில் படித்த பொன்மொழிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்திருக்கிறார். இதை எப்படி கவிதை என்பது?!


எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை யதார்த்தமாக ஒரு கவிஞன், வித்தியாசமாக படம் பிடித்துச் சொல்கிறானென்றால், என்னைப் பொருத்தவரை, அதுதான் கவிதை. இதைப்போல..


புத்தகம்

சொல்லிலும்

‘கம்’ இருப்பதால்தான்

அதனை

யாரும் திறப்பதில்லையோ?!

(பா.ராஜேஸ்வரி, குளுவாங்)


• ஆய்வு
இந்த ஆய்வுக்காக, கடந்த ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் (2004), நான்கு மாதங்களில் வெளிவந்த தென்றல், மன்னன், நயனம், வெற்றி, செம்பருத்தி, முத்தமிழ் போன்ற புதினங்களும், மக்கள் ஓசை, மலேசிய நண்பன், வானம்பாடி, உயர்வோம் போன்ற பத்திரிக்கைகளும் என் பார்வைக்காய் என்னிடம் தரப்பட்டன. இவற்றில் நான் கண்ட மொத்த படைப்புக்கள் 682. இவை அத்தனையையும் வாசித்தேன், ஆராய்ந்தேன். சிலவற்றின் தலைப்பே அவற்றுக்கான முகவரியாய், படிக்கும் ஆவலை தூண்டின. சிலவோ, முதல் வரியிலேயே... என் பொறுமையின் எல்லையை சோதித்தன! ஆய்வோடு நின்றுவிடாமல் அபிப்பிராயம் கூறுவதும் கடமை என்று உணர்கிறேன். ஆகவே, இது வெறும் ஆய்வு மட்டும் அல்ல, விமர்சனம்.


கிடைக்கப்பெற்ற 682 படைப்புக்களில், பாராட்டுக் கவிதை, இரங்கற்பா, நன்றி கூறும் கவிதை, கட்டுரைகளில் தலைகாட்டிய கவிதைகள், தொடர்கவிதைகள் போன்றவை ஆய்வுக்கு ஏற்புடையவை அல்ல என்பதால் அவற்றை தவிர்த்து விட்டேன்! மேலும் பல படைப்புக்களை கவிதைகளாக ஏற்றுக்கொள்ள ‘இலக்கியக் கண்’ மறுத்ததால், 340 கவிதைகளை மட்டும் ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் எடுத்துக்கொண்டேன்.


கவிதையின் ஆய்வை தொடங்குமுன், கவிதை எழுதுபவர்களின் பின்னணியை சற்று ஆராய்ந்து பார்க்கவேண்டுமல்லவா?


தோட்டத் தொழிலாளர்களாய் இங்கு நாம் குடியேறுவதற்கு முன்பாகவே, கடாரத்தை வென்று ஆட்சி புரிந்தவர்கள் நாம். இந்த சரித்திரம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏடுகளிலிருந்து ‘சரிக்க’ப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பது வேதனை. இது இப்போதுள்ள சரித்திர பாடப்புத்தகங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். நம்மவர்களே இப்பொழுது தம் பிள்ளைகளை தமிழ்பள்ளிகளுக்கு அனுப்ப தயங்குகின்றனர் என்பது இன்னொரு வேதனை! இது அவர்களின் குற்றமும் இல்லை. தமிழ்ப் பள்ளிகளின் குற்றம். தரம் இருந்தால், எந்த ஒரு பொருளுக்கும் தேவை (demand) இருக்கும். இந்த நிலையில், தமிழர்கள் மத்தியில் தமிழ் கற்பவர்கள் குறைவு. அப்படி கற்பவர்கள், ஆறாம் வகுப்பிற்கு மேல் அதை தொடர்வது அதைவிட குறைவு! காரணம், அரசாங்கத் தேர்வுகளில் தமிழ் வினாத்தாட்களை திருத்தும் ஆசிரியர்களின் போக்கு. தமிழ் மொழியில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை ஆராய்ந்தால் இந்த உண்மை புரியும். ஆறாம் படிவத்தில் தமிழ் மொழி தாளுக்கும் மற்ற மொழி தாட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஆராய்பவர்களுக்கு இந்த உண்மை புரியும்!


இங்கே, எந்தப் பள்ளியிலும், ஆறாம் படிவத்துக்கான வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால். இன்னமும் நிறைய மாணவர்கள் ஆறாம் படிவத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் நல்ல முறையில் தேர்ச்சி பெறுகின்றனர்?!


தமிழ் மொழி தேர்வில் தோற்றவர்கள்தான் அதிகம் எனும் நிலையில், தமிழை ஒரு பாடமாக எடுக்க எந்த ஒரு சராசரி மாணவனும் முன்வர மாட்டான். தமிழ் சோறு போடாது என்பது போய்.. இப்பொழுது தமிழ் ‘மார்க்’ போடாது என்றாகி விட்டது! இது தமிழ் தாட்களை தாயாரிப்பவர்களும், திருத்துபவர்களும் இம்மண்ணில் புரிந்த சாதனை. இன்னும் கொஞ்ச நாட்களில் யாருமே தமிழ் தாட்களின் பக்கம், மறந்தும் தலை வைக்கக் கூடாது என்ற எண்ணமோ! அவர்களுக்கு பிறகு, அந்த பதவிகளே இருக்கக்கூடாது என்ற ‘பெரிய’ மனமோ தெரியவில்லை.. ஆனாலும், தமிழ் ‘செடி’யல்ல.. விருட்சம்..!

(தொடரும்)