தமிழோடு வாழ்பவன்..

My photo
சுபாங் ஜாயா, சிலாங்கூர், Malaysia
மனிதத்தை மதிக்கும் மனிதன்..

Monday, February 16, 2009

புதுக்கவிதை கருத்தரங்கில் எனது ஆய்வுக்கட்டுரை- பகுதி 2 (நவம்பர் 2006)

இந்த நிலையிலும் தாய்த் தமிழைத தவறாது கற்பவர்களை நாம் மனமார பாராட்டத்தான் வேண்டும். கவிதை எழுத ஆர்வத்தோடு பேனா பிடிக்கும் அந்த கரங்களோடு கைகுலுக்கத்தான் வேண்டும். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், தென்றலில் வெளிவந்த ஒரு கவிதை!


Nii Illaamal...

Malai illaamal Niir Illai...

Kadal Illamal Alai Illai...

Kilai illamal ilai illai...

Pagal illaamal iravu illai...

Suvaasam illaamal uyir illai...

Uyir illaamal yaavum illai...

Nii illaamal naan illaai endrum!

-Bintang 2003, Seremban


ஆங்கில எழுத்துக்களை (Romanised Tamil) கொண்டு தமிழ்க் கவிதை! இது கவிதையா இல்லையா - விவாதிப்பதில் விருப்பமில்லை எனக்கு. இது போன்ற படைப்புக்கள் வெளிவர தொடங்கிவிட்டன. இந்த நிலைக்கு யார் காரணம்? தமிழில் எழுத படிக்க, கற்க வேண்டும் எனும் ஆவல் ஏற்படாமல் போனதற்கு யார் காரணம்?

இத்தனை சிரமங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் புதுக்கவிதை தன் சிருங்கார சிறகுகளை விரித்து இலக்கிய வானில் இளைப்பாறாமல் பறக்கிறதென்றால்.. அதன் பெருமை, எங்கள்இளைய தேசத்துஇலக்கியவாதிகளையே சாறும். நல்ல கவிதை எழுதுபவர்களில் பெரும்பாலானோர், தமிழாசிரியர்களாகவும் பல்கலைக் கழக மாணவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் மரபை எழுதி பெயர் வாங்கிய கவிஞர்களும், புதுக்கவிதையின் வேருக்கு கொஞ்சம் உரமிட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி!!!

இலக்கிய களவுகள்
ஒரு சில கவிதைகளை படிக்கும் போது, “எங்கோ படித்தது போல இருக்கிறதே!” என்ற எண்ணம் தோன்றுகிறது. உதாரணத்திற்கு;

காதலித்துப்பார்
காதலித்துப் பார்- கதைகள் சொல்வாய்...
காதலித்துப்பார்- மழையும் மாளிகையாகும்
காதலித்துப்பார்- பாதங்களால் பாலம் கட்டுவாய்

இப்படி ஒரு கவிதையை, ஜொகூர் மாச்சாயிலிருந்து வீரா. இராமன், எழுதியிருந்தார். வைரமுத்துவின்இந்த பூக்கள் விற்பனைக்கல்லபுத்தகத்தை படித்தவர்களுக்கு, இதே தலைப்பில் அவர் இயற்றிய கவிதை நிச்சயம் நினைவுக்கு வரும்! இது இலக்கியத் திருட்டா அல்லது வைரமுத்துவின் தாக்கமா? சில வேளைகளில், இது போன்ற கவிதைகள் இதழாசிரியர்களின் கண்களில் கறுப்பைத் தடவி, விடிந்துவிடுகின்றன!

(திரு வீரா.இராமனுக்கு வயது அப்போதே ஐம்பது இருக்கும் என்பதை அவரில் இக்கருத்தரங்கில் நேரில் சந்தித்த போது உணர்ந்தேன்! அவர் தொடர்ந்து சொந்தமாக எழுத வேண்டும் என்பதே எனது அவா..)


கவிதைகளில் ‘சினிமா’ சாயல்
இந்த 121 நாட்களில் வெளிவந்த கவிதைகளை அலசிப்பார்க்கும் பொழுது, சினிமா பாடல் வரிகளை காப்பியடித்து, மாற்றியமைத்து வெளிவந்தபடைப்புக்களும்நிறையவே காணப்பட்டன. காப்பியடிப்பது கூட திறமைதன். ஆனால், அதைக்கூட சிலர் ஒழுங்காய்ச் செய்யவில்லை! இதோ ஒரு உதாரணம்:


பொறுப்பு
என் இனிமைக்கு நீ பொறுப்பு
என் தனிமைக்கு நீ பொறுப்பு
என் கனவுக்கு நீ பொறுப்பு
என் கண்ணீருக்கும் நீ பொறுப்பு..

உன் மலர்ச்சிக்கு நான் பொறுப்பு
உனை மணமுடிப்பதென் பொறுப்பு
உன் இரவுக்கு நான் பொறுப்பு
கனவுக்கு நான் பொறுப்பு!

-ஏஞ்சல் பொண்ணு, பூச்சோங்

அந்த வரிகளில் ஒரு சினிமா பாடல் தெரிகிறதே தவிர, கவிதை கடுகளவும் இல்லை! இதுபோன்ற நிறைய கவிதைகள் இந்த நான்கு மாதத்தில் வெளிவந்திருந்ததால், அவற்றையும் ஆய்வுக்கு நான் எடுத்துக்கொள்ளவில்லை.


ஆயின், நான்கு மாதங்களில் நல்ல படைப்புக்களே இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். இருந்தன! புற்கள் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும், நெற்கதிர்கள் அதைவிட உயரம் என்பதால் அவற்றை கண்டுகொண்வதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ளவில்லை நான்.

புதுக்கவிதைகளில் உத்திகள்
இந்த நான்கு மாத கவிதைகளை வாசித்துப் பார்க்கும்பொழுது, என்னையும் அறியாமல், என் விழிகள் ஒருசில கவிதைகளை மொய்க்கத் தவறவில்லை. கவிஞர்களின் சிந்தனாசக்தியையும் அவர்கள் கையாண்ட உத்திகளையும் கண்டு நம் நாட்டிலும் எத்தனையோ படைப்பாளிகள் இலைமறைகாயாகஇருப்பது கண்டு மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. ‘காய்கள்பழுத்தால், அதன் வாசமே அவற்றுக்கான முகவரியாகிவிடும் என்பதே என் கருத்து.

இந்த பெருமைக்கும் வளர்ச்சிக்கும், தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடர்ந்து நடத்தி வரும் புதுக்கவிதை திறனாய்வு கருத்தரங்குகள் முக்கிய காரணம் என்பதை இந்த கருத்தரங்களில் கலந்து கொள்பவர்கள் மறுக்க மாட்டார்கள். டாக்டர் வே. சபாபதி அவர்களின் பங்கையும் யாரும் மறக்க மாட்டார்கள். நன்றி மறப்பது, தமிழுக்கும் தமிழனுக்கும் தெரிந்திராத ஒரு பண்பு!

ஏனோதானோ என எழுதிய காலம் இப்பொழுது சற்று மாறத்தொடங்கி இருக்கிறது. அதற்கு, இந்த நான்கு மாதத்தில் உள்ளூர் புதினங்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்த கவிதைகளில் என் கவனத்தை ஈர்த்திழுத்த இந்த வரிகள் சான்று.

முரண்
காதல் பிடிக்காதவன்..
கவிதைக் கருத்தரங்கில்
முதல் வரிசையில்...!

கரு
இருவர் பசியாறலில்
ஒருவர் வயிறு நிரைந்தது!

உறக்கம்
மரண ஒத்திகை..

கணவு வாசல்..

நீ கூட குழந்தை உருவில்..!

-(மணிராமு, சுங்கைப்பட்டாணி)

கவிஞர், முரண், குறியீடு மற்றும் படிம உத்திகளை அழகியற் கூறுகளோடு கையாண்டிருக்கின்றார். ஒவ்வொரு பாடு பொருளையும் புதிய கோணத்தில் படம் பிடித்திருக்கிறார்.

இன்னும் நிறைய கவிஞர்கள், இதுபோன்ற உத்திகளை கவனமாகவே கையாண்டிருக்கிறார்கள். முரண், இவர்களில் அநேகருக்கு கச்சிதமாய்க் கைகொடுத்திருக்கிறது. இதோ அதற்கொரு சான்று:


“மண்ணிக்க வேண்டும்
ஆழமாய் நேசித்தால்
வெறுப்பு வரும் என்கிறார்கள்
முயற்சி செய்கிறேன்
உனை வெறுப்பதற்கு!!

-நிஷா, தலைநகர்.


கவிதைகளில் காதல்
காதல் கவிஞனை பிரசவிக்கின்றது. அதனால்தானோ என்னவோ, எப்பொழுதுமே கவிதைகளில், காதல் முதன்மை வகிக்கின்றது. இந்த நான்கு மாதத்தில் வெளிவந்த கவிதைகளில், 65 சதவிகிதம் காதலுக்காகவும், காதலர்களுக்காகவுமே பேனாக்களிடமிருந்து விடைபெற்றிருக்கின்றன. காதலின்பால் சிக்குண்டு தவிக்கும் இளசுகளின் அநுபவமே, பெரும்பாலும் அவர்களின் கவிதையாய் வெளிப்படுகிறது. சிலரின் கவிதைகளை படிக்கும் பொழுது, சிலிர்க்கிறது. சில கவிதைகளினால் சத்தமில்லா சிரிப்பு வருகின்றது. இன்னும் சிலரின் கவிதைகளை படிக்கும்போது, நமக்கும் காதல் வருகிறது, கவிதையின் மேல்! உதாரணத்திற்கு ஒரு வரி...


என் ஜீன்சுகளை
நனைத்திருக்கும்
அவளது கண்ணீரின் ஆழத்தில்
நான் மூழ்கிப்போனதுண்டு!”

-செல்வம் அர்ஜுனன், சுங்கைப்பட்டாணி.

காதலிலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, ஆண்களை வீழ்த்த பெண்கள் பயன்படுத்துவது இரண்டு ஆயுதங்கள்: கவின் சிரிப்பு; கண்ணீர். இந்த இரு ஏவுகணைகளை எதிர்த்திடும் சக்தியும் யுக்தியும் இன்னும் கண்டு பிடிக்கப்படாத நிலையும், பாவம், கவிஞன் இவன் என் செய்வான்? அவன் சொல்ல வந்த கருத்தைஇருண்மை பண்புகலந்து கூறியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

வழக்கமான காதல் கவிதைகளையே பார்க்க முடிந்த நமக்கு, .பச்சைபாலனின்காற்பந்து ரசிகன் காதலிக்கிறான்”, என்ற கவிதை நல்ல விருந்து! குறியீடு, படிமம், அங்கதம் என்று கவிதைக்கு அழகு சேர்த்திருக்கிறார்.

“உனை அடைய விடாமல்
தற்காப்பு அரணமைத்து
உன் அப்பா
தடுத்துக்கொண்டே இருக்கிறார்..

மஞ்சள் அட்டைக்கும்
தகுதி பெறாத
சின்னச் சின்னத் தவறுகளுக்கு
அவசரமாய் நீட்டுகிறார் சிவப்பு அட்டை!”

என்ற வரிகள்.. அவசர அவசரமாய் அடுத்த வரிகளை படிக்கச் சொல்லி கவனத்தையும் கண்களையும் தூண்டுகின்றன.

தடையெல்லாம் தாண்டி
பெனால்டி பெட்டிவரை முன்னேறினாலும்
உன் இதய வலைக்குள்
புகுந்து விடும் யுக்தி
எனக்கு இன்னும் புரியவே இல்லை!”

வித்தியாசமான சிந்தனைகள்.. அழகான குறியீடுகள்.. மனதில் நிற்கின்றன. இதில், பெரிய கருத்துக்கள் ஒன்றும் இல்லையென்றாலும், சொல்ல வந்த விஷயத்தை, அழகியற்கூறுகளோடு சொல்லி இருக்கிறார் கவிஞர். அவருக்கு, புதுக்கவிதையின் முப்பெறும் உத்திகளும் கை கொடுத்திருக்கின்றன.

(இன்னும் தொடரும்..)

1 comment:

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/
சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்